காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில்
'கிராவிடாஸ்' என்னும் அறிவுசார் தொழில்நுட்ப திருவிழா மூன்று நாள் நடைபெறுகிறது.
அப்போது கிராவிடாஸ் என்ற பேனர் டிரோனில் பறந்தது. இந்த ட்ரோன் விழா அரங்கத்தின் உள்ளே சுற்றி வந்தது. மனித ரோபோ ஒன்று அனைவரையும் வரவேற்று ஆங்கிலத்தில் பேசியது.
விழாவில் வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது;
கிராவிடாஸ் என்னும் அறிவுசார் தொழில்நுட்ப திருவிழா மூன்று நாட்கள் இங்கு நடைபெறுகிறது.
இதில் இந்தியாவில் இருந்து மட்டும் அல்லாமல் வெளிநாட்டு மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.
நாம் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் அதிகமாக செலவழிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயில உதவும். நாம் ஏன் உயர்கல்விக்கு அதிகமாக செலவழிக்க வேண்டும். உயர் கல்வி ஆராய்ச்சிக்கு அதிகமாக செலவழித்தால் தான் நம்மால் சாதிக்க முடியும்.
உயர்கல்வி, ஆராய்ச்சி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. ஆராய்ச்சிக்கு அதிகமாக செலவழிப்பதில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் காப்புரிமை பெற 5 ஆண்டுகள் ஆகிறது. இது எளிமை படுத்தப்பட வேண்டும்.
உலகளவில் ஆராய்ச்சியில் வி.ஐ.டி.பல்கலைக்கழகம் 2015 ஆம் ஆண்டு 81 வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 46 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆராய்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வி.ஐ.டி பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளிக்கிறது. வி.ஐ.டி.யில் 6,500 ஆராய்ச்சி மாணவர்கள் நான்கு வளாகங்களிலும் படிக்கின்றனர். ஆராய்ச்சிக்கு தனியார் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம். தொழில் நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு 36 சதவீதம் பங்களிக்கிறது. மக்கள் தொகையில் நாம் சீனாவை முந்திவிட்டோம். மக்கள் தொகையில் உலக அளவில் நாம் முதலிடத்தில் உள்ளோம். ஆராய்ச்சி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் சீனா நம்மை விட முந்தி செல்கிறது. எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். உலக அளவில் நாம் பொருளாதார முன்னேற்றத்தில் 5வது இடத்தில் உள்ளோம்.
சிறப்பு விருந்தினராக டேனிலி இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் மனோரஞ்சன் ராம் கலந்து கொண்டு பேசினார்.