நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும்,
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில்
ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாதத்தில் நடைபெறும்
சித்திரை வசந்த உற்சவ விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவம், ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம்,
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்
திருவிழா, தை மாதத்தில் உத்தராயண புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும்.
அந்த வகையில் நாளை 21 ஆம் தேதி
தொடங்கி 10 ம் தேதி வரை தொடர்ந்து 9 தினங்கள் இரவு நேரத்தில் அண்ணாமலையார் திருக்கோவிலில்
உள்ள மகிழ மரத்தை 3 முறை அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி
அளிப்பர். இரவு நேரங்களில் நடைபெறும் இந்த நிகழ்வின் பொழுது பொம்மை பூச்சொரிதல் (பூ
கொட்டும்) விழாவும் வெகு விமர்சையாக நடைபெறும். அதனைக் காண ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார்
திருக்கோவில் வந்து அண்ணாமலையாரை தரிசித்து செல்வர்.
அதற்காக நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார்
திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்
தொடர்ந்து சம்பந்த விநாயகர் ஆலயத்தில் பந்தக்காலுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்
உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திருக்கோவிலில்
ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பந்தக்கால் சம்பந்த விநாயகர் ஆலயத்திற்கு அருகே ரோகிணி நட்சத்திரம்
கன்னியா லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக பந்தக்கால்
முகூர்த்தம் விழா நடைபெற்றது.இந்த நிகழ்வின் போது பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு
சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 30.04.2025 ஆம் தேதி
அன்று காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும் தொடர்ந்து அன்று இரவு திருக்கோவில் கொடிமரம்
அருகே மன்மத தகனம் நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.