பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஜமீன்
கூடலூர் மகா காலபைரவர் கோயிலில் 108 மூலிகைகளால் யாகம் சிறப்பு நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஜமீன் கூடலூர் கிராமத்தில் உள்ள
அருள்மிகு மகா காலபைரவர் கோயிலில் நேற்று பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு
வழிபாடு நடந்தது. இதையொட்டி கோயில் நிறுவனர் பரமானந்த சுவாமிகள் காலை 11 மணிக்கு
108 மூலிகைகள் மற்றும் மட்டை தேய்காய் கொண்டு சிறப்பு யாகம், 108 சங்காபிஷேகம், பிரபஞ்ச
தியான பயிற்சி ஆகியவற்றை நடத்தினார்.
பின்னர் பிற்பகல் 1 மணியளவில் காலபைரவருக்கு
பால், பன்னீர், சந்தனம், இளநீர், கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து
சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில்
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு
கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.