விழுப்புரம்
மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பெண்ணைவலம் கிராமத்தில்
பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. கடந்த
14ந் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் வைகாசி பெருவிழா தொடங்கியது. ஒன்பது
நாள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ஆராதனைகள் செய்து சாமி வீதி உலா நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று சுவாமிக்கு
திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு
அபிஷேகம் ஆராதனைகள் செய்து சாமி முத்து பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. அதன் பின்
நேற்று காலை சென்டை மேளங்கள் முழங்க தேர் திருவிழா நடைபெற்றது. தேர் முக்கிய
வீதிகள் வழியாக சென்று கோயிலை சென்றடைந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளானப் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை
வடம்பிடித்து இழுத்து சாமியை வழிபட்டனர். அப்போது பக்தர்கள் தங்கள் நிலத்தில்
விளைந்த தானியங்களையும், ரூபாய் நாணயங்களையும்
சுவாமிக்கு சூறை விட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு அழுகளம் நிகழ்ச்சி
நடைபெற்றது. தர்ம பட்டாபிஷேக நிகழ்த்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.