நினைத்தாலே முக்தி தரும் தலமாக
விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால்
மண்டபம் அருகே அமைந்துள்ளது பெரிய நந்தி. நந்தி பகவானுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷ
தினத்தன்று அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள
பெரிய நந்தியம் பெருமானுக்கு சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினமான நேற்று பிரதோஷம்
வெகுவிமர்சையாக நடைபெற்றது. பிரதோஷ தினத்தை
முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள நந்தியம்பெருமானுக்கு அரிசி மாவு, மஞ்சள்
தூள், அபிஷேக தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி,
ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து அருகம்புல், கனகாம்பரம்,
சாமந்தி, மல்லி ஆகிய பூக்களினால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பான
முறையில் ஆராதனை நடைபெற்றது.
சித்திரை மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு
சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ தினத்தின்போது நந்தியம்பெருமானை வழிபட்டால் நினைத்த
காரியம் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும், குழந்தை
பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். ஆகவே சித்திரை மாத
வளர்பிறை பிரதோஷ தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோவில்
வல்லாள மகாராஜா கோபுரம் அருகில் உள்ள நந்தியம்பெருமானை தரிசனம் செய்தார்கள்.
குறிப்பாக சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று கோவிலில் வந்து வழிபாடு செய்தால்
12 ஆண்டுகள் கோவிலில் சாமி தரிசனம் செய்ததற்கு சமம் என்று சொல்வார்கள் என்பதும் ஐதீகம்.
படவிளக்கம்
உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார்
திருக்கோவிலில் சித்திரை மாத வளர்பிறை மஹா பிரதோஷம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.